அரசியல் வன்முறைகள் உள்ளிட்ட கேரள சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து நிலைமையை விரைவில் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(33). ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியான அவர், கடந்த சனிக்கிழமையன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு சென்றனர்.
இடது கை துண்டாக வெட்டப்பட்ட நிலையில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், எட்டு பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களே இக்கொலையின் பின்னணியில் இருப்பதாக பாஜக-வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், ஆர் எஸ்எஸ் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் பாஜக-வினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, இன்று காலை முதல் அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரள மாநில நிலைமை குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரள மாநில சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து முதல்வரிடம் வருத்தம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனநாயக நாட்டில் அரசியல் வன்முறை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். கேரளாவில் அரசியல் வன்முறைகள் ஒடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கூடிய விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.