கேரளாவில் உள்ள தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடும் போது திருட்டுத்தனமாக பதிவு செய்வதை தடுக்கவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் நடந்த திருட்டுச் சம்பவம் குறித்து, ஊழியர்கள் கேமராக்களை சோதனை செய்த போது, சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியிடம், 60 வயதுக்காரர் ஒருவர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த காட்சி பதிவாகி இருந்தது. படம் தொடங்கியதில் இருந்து அவர் அந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருந்தார்.
சிறுமிக்கும் அவரது தாய்க்கும் நடுவில் உட்கார்ந்து இருக்கும் அந்த நபர், சிறுமியின் தாயாருடன் தகாத முறையில் நடந்து கொள்கிறார். மற்றொரு புறம் அந்த சிறுமியிடமும் சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்.
இதைத் தொடர்ந்து, சினிமா தியேட்டரில் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி சைல்டுலைன் அமைப்பு மூலம் சங்கரன்குளம் போலீசில் தியேட்டர் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் சிறுமியிடம் தியேட்டரில் செக்ஸ் சில்மிஷம் செய்யும் காட்சி கேரளாவில் உள்ள உள்ளூர் டி.வி.யில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மலப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இந்த சம்பவம் பற்றி சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரன் விசாரணை நடத்தினார். கண்காணிப்பு கேமரா காட்சியை போலீசார் முழுமையாக போட்டுப் பார்த்த போது சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் தியேட்டரில் இருந்து சொகுசு காரில் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதைவைத்து பிரபல தொழில் அதிபரான மைதீன்குட்டியை போலீசார் கைது செய்தனர்.
கைதான தொழில் அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி புகார் செய்தும் அதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சங்கரன்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மைதீன் குட்டியையும், சிறுமியின் தாயையும் போஸ்கோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொழிலதிபரின் காம இச்சை தெரிந்தே தான், தனது மகளை சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறார் அவரது தாய். அதுபோல், தனது மகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் தனக்கு தெரியாது என்று அவர் கூறினாலும், போலீசார் அதனை மறுக்கின்றனர். மைதீன்குட்டியின் ஆசைக்கு இணங்கியே தனது மகளை அழைத்து வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.