ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் இன்று நடத்தி வரும் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குப்வாராவின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பஞ்ச்காம் ராணுவ முகாம் மீதுதான் இந்த தாக்குதல் நடப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் போலீசார் இதனை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
தற்போது நடந்து வரும் இந்தத் தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட 3 ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதாவும், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதால், தீவிரவாதிகளின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.