இந்தியாவை சேர்ந்த பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் குறித்த ஆவணப்படத்தில், ‘குஜராத்’, ’பசு மாடு’, ‘இந்து இந்தியா’, ’இந்துத்துவ இந்தியா’ போன்ற வார்த்தைகளை நீக்கினால் தான் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிப்போம் என திரைப்பட தணிக்கைக் குழு கூறியிருப்பது, இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும், கருத்து சுதந்திரத்தையும் பறிப்பதாக பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது.
பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் குறித்த ’தி ஆர்க்யுமெண்டேடிவ் இந்தியன்’ எனும் ஆவணப்படத்தை சுமன் கோஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படத்தில் அமர்த்தியா சென்னும் தோன்றுகிறார். ஒரு மணிநேரம் ஓடும் இந்த ஆவணப்படமானது 2002 மற்றும் 2017-ஆம் ஆண்டுகள் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் வரும் வெள்ளிக் கிழமை வெளியாக இருந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை கொல்கத்தாவில் உள்ள திரைப்பட தணிக்கைக் குழு மண்டல அலுவலகத்தில் தணிக்கை அதிகாரிகளுக்கு இப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. அப்போது, படத்தை பார்த்த அதிகாரிகள், படத்திலிருந்து ‘குஜராத்’, ’பசு மாடு’, ‘இந்து இந்தியா’, ’இந்துத்துவ இந்தியா’ உள்ளிட்ட வார்த்தைகளை நீக்கினால் மட்டுமே யு/ஏ சான்றிதழ் அளிக்க முடியும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
”’குஜராத்’, ‘பசு மாடு’ உள்ளிட்ட வார்த்தைகளை நீக்க வேண்டும் என தணிக்கைக் குழு கூறியிருப்பது கேலியாக உள்ளது. இந்த படத்திலிருந்து ஒரு வார்த்தையைக் கூட நாங்கள் நீக்க போவதில்லை. ஆனால், இதற்கென சில நடைமுறைகள் உள்ளன. நாங்கள் அந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த விவகாரம் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை பார்ப்போம்.”, என ஆவணப்படத்தின் இயக்குநர் சுமன் கோஷ் தெரிவித்தார்.
இதனிடையே ”இந்து இந்தியா உள்ளிட்ட வார்த்தைகள் இனவாத வெறுப்பை உருவாக்கலாம். மேலும், இந்த வார்த்தைகளால் குஜராத் மாநிலத்திற்கு ஆபத்து நேரலாம்”, என தணிக்கைக் குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. அமர்த்தியா சென் போன்று அந்தஸ்து உடையவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்கள் என்ன செய்வார்கள்?”, என கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பேசிய அமர்த்தியா சென், “இந்த விஷயம் எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியா எதேச்சதிகாரத்தின் பிடியில் இருப்பதை இது உணர்த்துகிறது. அவர்களுக்கு நான் பசு மாட்டை பற்றி பேசியது பெரிதல்ல. அவர்கள் மாட்ட இறைச்சிக்காக தடை செய்தது குறித்து பேசியதுதான் பிரச்சனை. அதேபோல், குஜராத் என்ற வார்த்தையை உபயோகித்தது பிரச்சனை அல்ல. குஜராத்தில் 2002-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கலவரம் குறித்து நான் பேசியது அவர்களுக்கு பிரச்சனையாகிறது.”, என கூறினார்.