ஆணவக் கொலை என்று சந்தேகிக்கப்படும் வழக்கில் 18 வயது பெண்ணும் 21 வயது ஆணும் கொலை செய்யப்பட்டு அவர்களின் உடல்கள் முதலைகள் நிறைந்த சம்பல் ஆற்றில் வீசப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மத்திய பிரதேசத்தின் மோரேனா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் கிராமத்தில் ஷிவானி தோமர் மற்றும் ராதேஷ்யம் தோமர் ஆகியோர் ஷிவானியின் குடும்பத்தினரால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக பெண்ணின் குடும்பத்தினர் எதிர்த்ததாகவும், பக்கத்து கிராமமான பலுபுராவைச் சேர்ந்த ராதேஷ்யாமுடன் ஷிவானியின் காதலைக் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: ஜெய் ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தல்; மரத்தில் கட்டி வைத்து அடித்து, தலையை மழித்து இளைஞர் சித்ரவதை
தனது மகன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ராதேஷ்யாமின் தந்தை அளித்த காணாமற்போன புகாரின் பேரில், சந்தேகமடைந்த போலீசார் விசாரணையைத் தொடங்கிய பின்னர் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது.
அவர்களது காதலுக்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு இருவரும் ஓடிவிட்டதாக போலீசார் முதலில் கருதினர். பின்னர் அந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பல மணி நேர விசாரணைக்கு பின், பெண்ணின் குடும்பத்தினர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
“விசாரணையின் போது, பெண்ணின் குடும்பத்தினர் தம்பதியைக் கொன்றதை ஒப்புக்கொண்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களால் ஆற்றில் வீசப்பட்ட தம்பதியினரின் உடலை மீட்க முயற்சிக்கிறோம், ”என்று மோரேனா மாவட்ட ஏ.எஸ்.பி ரைசிங் நர்வாரியா கூறினார்.
ஜூன் 3 ஆம் தேதி ஷிவானி மற்றும் ராதேஷ்யாம் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் கனமான கற்களில் கட்டி சம்பல் ஆற்றில் வீசப்பட்டதாகவும் பெண்ணின் குடும்பத்தினர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.