/tamil-ie/media/media_files/uploads/2017/09/vikram-yourstory.jpg)
இரண்டு கைகளும் இல்லாவிட்டாலும் தன் கைகளால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் தன் கால்களால் செய்வதற்கு கடும் முயற்சிகள் எடுத்து வெற்றி பெற்றவர் தான் விக்ரம் அக்னிஹோத்ரி. இரு கைகளும் இல்லாமல் வாகன உரிமம் வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரைத்தான் சேரும். ஆனால், இந்த சாதனை அவ்வளவு எளிதில் நிகழ்ந்து விடவில்லை. அதற்குப் பின் விக்ரமின் கடும் பிரயத்தனங்கள் இருக்கின்றன.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தோர் பகுதியை சேர்ந்த விக்ரம் அக்னிஹோத்ரிக்கு ஏழு வயதில் மின்சாரம் தாக்கியதில் தன் இரு கைகளையும் இழந்தார். ஆனால், நம்பிக்கையை கைவிடாமல், யாருடைய உதவியும் இன்றி தன்னுடைய வேலைகளை செய்ய கற்றுக்கொண்டார்.
சாதாரண மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே படித்தவர். முதுகலை பட்டம் வரை படித்த விக்ரம் அக்னிஹோத்ரி, தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட. வைட்டல் ஸ்பார்க் வெல்ஃபேர் சொசைட்டி (Vital Spark Welfare Society) எனும் அமைப்பை நிறுவி, பள்ளி மாணவர்கள், பெரு நிறுவனங்கள் பணிபுரிபவர்களுக்கு ஊக்கப்பயிற்சி, பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறார்.
எல்லா வேலையும் தன் கால்களை வைத்தே செய்ய பழகிக்கொண்ட விக்ரம் அக்னிஹோத்ரி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்ட பழகிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஏனென்றால் கார் ஓட்ட பழகிக்கொண்டால் அதற்கு மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமிருக்காது இல்லையா?
அதற்காக சொந்தமாக ஆட்டோமேட்டிக் கியருடன் கூடிய காரை வாங்கினார். விக்ரம் அக்னிஹோத்ரிக்கு கார் ஓட்ட பயிற்சி அளிக்க எந்த பயிற்சி பள்ளியும் முன்வரவில்லை. ஆனால், அவர் தன்னம்பிக்கையை இழக்காமல், இதுகுறித்து வீடியோக்களை பார்த்து தன் கால்களாலேயே கார் ஓட்டக் கற்றுக்கொண்டார்.
அதன்பின், ஓட்டுநர் உரிமம் எடுக்க வேண்டும். இவரது கார் ஓட்டும் திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்த ஆர்.டி.ஓ. அதிகாரிகள், சட்டத்தில் இடமில்லாததால் ஓட்டுநர் உரிமம் வழங்கவில்லை. அதன்பின், நீதிமன்றத்தை நாடி ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றார் விக்ரம் அக்னிஹோத்ரி. ஓட்டுநர் உரிமம் பெறும் முன்பு வரை சுமார் 22,000 கிலோமீட்டர் வரை தன் காரில் பயணித்த விக்ரமின் பெயர், விரைவில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது.
இதுமட்டுமல்ல, நீச்சல், கால்பந்து விளையாட்டுகளிலும் திறமை வாய்ந்தவர் விக்ரம் அக்னிஹோத்ரி. ஒருமுறை டெய்லி மெயில் Daily Mail-க்கு அளித்த பேட்டியில், நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு என் குடும்பமும், நண்பர்களுமே காரணம். என்னை அவர்கள் கேலி செய்ததில்லை. அதனால் நான் எந்தவித சங்கடத்திற்கும் உள்ளானதில்லை. என்னைப் போன்றவ அனைவருக்குமே இம்மாதிரியான குடும்பமும், நண்பர்களும் முக்கியம்.”, என கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.