உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் மீது சட்டத்தை மீறியதாக வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராக சொன்ன, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு, மருத்துவ பரிசோதனை செய்ய, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் தன் மீது வழக்கு தொடர யாருக்கும் உரிமையில்லை என விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்திருந்தார். அதோடு மட்டுமில்லாமல், தன்மீது வழக்குப்பதிவு செய்த ஏழு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்கள் அனைவரையும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டதோடு, அவர்களுடைய பாஸ்போர்ட்டை முடக்கவும் அதிரடியாக ஆணை பிறப்பித்தார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் தொடர் உத்தரவுகளை மதிக்காமல் மீண்டும் சர்ச்சையை எழுப்பும் படி, கருத்தும், தீர்ப்பும் கூறும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு, தற்போது மனநிலை குறித்த மருத்துவப் பரிசோதனை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக கொல்கத்தா மருத்துவமனையில் வருகிற மே 5-ஆம் தேதி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.