/tamil-ie/media/media_files/uploads/2017/05/a336.jpg)
கடந்த ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. நேற்று, அதற்கான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
நடந்து முடிந்த சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வில், கருணை மதிப்பெண் வழங்குவதற்கான விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. பிளஸ்-2 பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்கும் வழக்கமான முறையை ரத்துசெய்வதாக சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்தது.
இந்நிலையில், கருணை மதிப்பெண் முறையை ரத்து செய்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு, சிபிஎஸ்இ-யின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தத் திடீர் அறிவிப்பால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் எனத் தெரிவித்தது. இதனால், இந்த ஆண்டில் புதிய ரத்து முடிவுகள் எதையும் அமல்படுத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் சிபிஎஸ்இ இயக்குநரகத்துக்கு அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து, இன்று பேட்டியளித்த மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் யாருக்கும் அநீதி இழைக்கப்படாது. இதனால், மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. விரைவில், தேர்வு முடிவு வெளியாகும் தேதியை சிபிஎஸ்இ அறிவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.