கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம், 50 மில்லியனுக்கும் மேற்பட்ட முகநூல் உபயோகிக்கும் பயனாளிகளின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி திருடியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்தச் சோதனைக்கு அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முக நூலில் பொதுமக்களின் விவரங்கள் திருடப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கு முகநூல் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்விவகாரம் முடிவுக்கு வருவதற்குள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்போன் செயலி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடியின் செல்போன் செயலி பொதுமக்களின் தகவலை திருடி அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுப்புவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இவ்வாறாக அவர் நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில், “முகநூலை விட அதிக தகவல் திருட்டில் ஈடுபட்டிருப்பது மோடியின் ஆண்ட்ராய்டு செயலி.” என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று அவர் தனது பக்கத்தில், மோடியின் செல்போன் ஆப், பொதுமக்களின் செல்போன் மூலம் ஆடியோ, வீடியோ மற்றும் தகவல் தொடர்புகளை ரகசியமாகத் திருடி வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் பொதுமக்களின் நண்பர்கள் மற்றும் குடுப்பத்தினர் தொடர்பு தகவல்களையும் திருடுகிறது என்றும்; மக்களின் இருப்பிடத்தை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “மோடி இப்போது குழந்தைகளின் விவரங்களையும் திரட்டி வருகிறார். இதற்காக என்.சி.சி மாணவர்களை கட்டாப்படுத்தி மோடி ஆப் பதிவிறக்கம் செய்ய வைக்கிறது.” என்று கூறியுள்ளார். இறுதியாக, “இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி” என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தக் கருத்தை தற்போது பெரும்பாலான இந்தியர்கள் கண்டு வருகின்றனர்.