விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கான உரிய கொள்முதல் விலை அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் கடந்த 1-ந் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த மாநிலத்தில் உள்ள மாண்ட்சோர் பகுதியில் விவசாயிகள் கடந்த 6-ஆம் தேதி நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்தும் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 6 பேர் பலியானார்கள்.
மத்தியபிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் சவுகான், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அமைதி திரும்புவதற்காக, 10-ஆம் தேதி(இன்று) காலை 11 மணிக்கு தசரா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன். அங்கிருந்துதான் அரசுப்பணிகளை கவனிப்பேன். விவசாயிகள் அங்கு என்னை சந்தித்து, பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தலாம். விவசாயிகள் போராட்டம், கலவரமாக மாறியது வேதனை அளிக்கிறது. வன்முறை நெருப்பை தூண்ட நினைத்தவர்களை தப்பவிட மாட்டோம். கலக கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அதன்படி, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார். மாநிலத்தில் அமைதி திரும்பும் வரை உண்ணாவிரதம் தொடரும் எனக் கூறியுள்ளார்.