டெல்லி மாநகர் இந்தியாவில் கடுமையாக காற்று மாசுபாட்டுக்கு ஆளாகியுள்ள நகரம். வாகனங்களின் பெருக்கம், தொழில்மயமாக்கல், பனிமூட்டம், தீபாவளிக்குப் பிந்தைய புகைமூட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி மாநகரில் பெரும்பான்மையான மக்கள், அவற்றிலிருந்து தங்களை பாதுகாக்க முகக்கவசம் அணிந்துகொண்டுதான் செல்கின்றனர். காற்று மாசுபாட்டால், மூச்சுத்திணறல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அந்நகரத்தில் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி என்.சி.ஆர். பகுதியில் முதன்முறையாக ஆக்ஸிஜன் சேம்பர் அமைக்கப்பட உள்ளது.
சுற்றுப்புறத்தில் காற்றில் உள்ள மாசுகளைக் களைந்து, மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கும் வகையிலான இயந்திரங்களைக் கொண்டுள்ள அமைப்புதான் ஆக்ஸிஜன் சேம்பர். இந்த ஆக்ஸிஜன் சேம்பர் முதன்முறையாக அதிகமாக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி என்.சி.ஆர். பகுதியில் உள்ள ஹூடா சிட்டி செண்டர் மெட்ரோ நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆக்ஸிஜன் சேம்பர், டெல்லி மெட்ரோ ரயில் நிலைய கார்ப்பரேஷன் மற்றும் தனியார் நிறுவனமான நர்ச்சர் க்ரீன் நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும்.
இத்திட்டத்தை ஹரியானா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் விபுல் கோயல் சமீபத்தில் துவங்கி வைத்தார். 12,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்த ஆக்ஸிஜன் சேம்பரில், காற்றை சுத்தப்படுத்துவதற்கான இயந்திரங்கள் மற்றும் காற்றை இயற்கையாகவே தூய்மைப்படுத்தும் பீஸ் லில்லி, அரிக்கா பாம், சான்ஸிவியேரா உள்ளிட்ட சுமார் 12 தாவர வகைகளும் நடப்படும். இது ஒரு சிறிய அறை வடிவத்தில் இருக்கும்.
4 கோடி செலவில் நிறைவேற்றப்படும் இத்திட்டம் இன்னும் ஒரு மாத காலத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பாக வேலைக்கு செல்பவர்கள், குழந்தைகள் ஆகியோர் இந்த ஆக்ஸிஜன் சேம்பரில் வந்து தூய்மையான காற்றை சுவாசித்துக் கொள்ளலாம் என திட்டத்தை நிறைவேற்றும் நர்ச்சர் க்ரீன் நிறுவன அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் தூய்மையான காற்றை சுவாசிக்க எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
2 மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட இன்னும் 6 இடங்களிலும் இத்தகைய ஆக்ஸிஜன் சேம்பர்கள் அமைக்கப்படும் என நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.