நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2017-18-ம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நடத்தப்பட்டது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. அதில், ஆங்கிலம், ஹிந்தியை தவிர்த்து மற்ற மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் மாறுபட்டவையாக இருந்ததாகவும், அவை கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் இருந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் நீட் தேர்வு முடிவகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளித்து அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.
இது தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சுமார் 11.35 லட்ச மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், அதில் 6.11 லட்ச மாணவர்கள் தேர்சி பெற்றனர். அவர்களுக்கான கலந்தாய்வும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்றனர்.
மேலும், நீட் தேர்வில் மாறுபட்ட கேள்விகள் வழங்கப்பட்டது ஏன் என சிபிஎஸ்இ-க்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வரும் ஆண்டு முதல் எதன் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்போகிறீர்கள் என்பது குறித்து சி.பி.எஸ்.இ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.