நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவரது பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 14 வயது சிறுமி ஆருஷி தல்வார், கடந்த 2008-ஆம் ஆண்டு அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மறுநாளே அவரது வீட்டின் வேலைக்காரர் ஹேமராஜ் என்பவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிறுமி ஆருஷி மற்றும் ஹேமராஜ் ஆகியோருக்கு தொடர்பு இருந்ததாக சந்தேகித்து அவரை பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுப்பூர் தல்வார் கொலை செய்திருக்கலாம் என சிபிஐ போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம். இதனிடையே வழக்கு பல திசைகளில் பரிணமித்தது. மர்மங்கள் தொடர்ந்தன.
இந்நிலையில், ஆயுள் தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆருஷி பெற்றோர் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது. அதில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது அலகாபாத் நீதிமன்றம்.
ஆனால், ஆருஷி கொலை வழக்கில் இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. அவற்றில் சிலவற்றை காண்போம். இவையனைத்தும் சிபிஐ விசாரணையின் அடிப்படையில் எழும் கேள்விகளே.
1. ஆருஷியை அவரது பெற்றோரே கொலை செய்தனர் என சிபிஐ சந்தேகித்த நிலையில், இன்று வரை அவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை போலீசார் கைப்பற்றவில்லை. மேலும், காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஆயுதம், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதல்ல என்ற குற்றச்சாட்டு உள்ளது.
2. ஆருஷி கொலையானபோது, அவரது தாயார் வேலைக்காரர் ஹேமராஜை ஃபோனில் தொடர்புகொண்டார். அந்த அழைப்பை யார் ஏற்றார் என்பது இன்னும் தெரியவில்லை. கொலைக்கு பின், ஆருஷியின் செல்ஃபோனை அடுத்த ஒரு வருடம் யார் பயன்படுத்தினர் என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
3. ஆருஷியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் சுனில் டோஹ்ரே, அவரது பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், அதே மருத்துவர் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த விஷயம் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஹேமராஜ் பிரேத பரிசோதனையில் முரணான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
4. ஆருஷி கொலை செய்யப்பட்டபின் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் ஒன்றுக்கொன்று முரணானதாக உள்ளன. உதாரணமாக, வெள்ளிக்கிழமை கொலை நடைபெற்ற நிலையில், எடுக்கப்பட்ட சில புகைப்படங்களில் வேறு கிழமையில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
5. ஆருஷியின் பெற்றோரிடம் விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு,
பழுதான ஏசியின் காரணமாக அவை ஒழுங்காக கேட்கப்படவில்லை என சிபிஐ போலீசார் கூறியது ஏன்?