பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை. பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் சட்ட விதியின்படி 1989-ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்கள் அனைவரும் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.
இந்நிலையில், பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை. பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்ப முறை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது: பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை. ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தாலே போதும். அதுவே பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அவர்களை பராமரித்த காப்பகத்திடம் இருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை பெற்று அளிக்கலாம் என்றார்.
பாஸ்போர்ட் பெற 1989-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் கட்டாயம் பிறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று இதற்கு முன்பு உத்தரவு நடைமுறையில் இருந்தது. அதற்கு பதிலாக பள்ளி மாற்று சான்றிதழ், பிறந்த தேதி குறிப்பிட்டுள்ள கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, எல்.ஐ.சி. பாலிசி சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அளித்தாலே போதும் என்றும் ஆவர் விளக்கமளித்துள்ளார்.
திருமணம் ஆனோர் திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கவோ, அவர்கள் விவாகரத்து பெற்றிருந்தால் அவர்களின் கணவர் அல்லது மனைவியின் பெயரையோ குறிப்பிடவோ தேவையில்லை. அதேபோல், 8 வயதிற்கு கீழுள்ள மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ள அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் பாஸ்போர்ட் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தாய், தந்தை ஆகியோரில் யாரேனும் ஒருவரின் பெயரை குறிப்பிட்டாலே ஏற்கப்படும். இருவரின் பெயரையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.