ரூ.2000, ரூ.500 நோட்டுகள் தேவையில்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
கருப்புப்பணத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் முதலில் ரூ.1,000, ரூ.500 நோட்டுக்களை ஒழிக்க வேண்டும். பின்னர் வங்கி பரிவர்த்தனைக்கு முழுமையாக மாற வேண்டும் என பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யோசனை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அதே ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று, கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு கடும் விமர்சனத்துக்குள்ளானது. இன்றளவும், பண மதிப்பிழக்க நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதைத் தொடர்ந்து, புதிய ரூ.200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.
இந்நிலையில், ரூ.2000, ரூ.500 நோட்டுகள் தேவையில்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். "ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களால்தான் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் செயல் அதிகரித்துள்ளது. அனைத்து பணப்பரிவர்த்தைகளையும், இணையவழியாக மேற்கொள்ளும் வழக்கத்தை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே, ஊழலில்லாத நிர்வாக அமைப்பை உருவாக்க முடியும். பெரிய பணப்பரிவர்த்தனைகள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் போது ஊழல் வேரறுக்கப்படும். எனவே, ரூ.100, ரூ.200 நோட்டுகளே போதுமானது" என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பணமதிப்பிழக்க நடவடிக்கைக்கு பின்னர் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆலோசிக்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு தலைமையிலான 5 மாநில முதல்வர்கள் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. அக்குழுவினர், கடந்த ஜனவரி மாதத்தில் தங்களது இடைக்கால அறிக்கையை பிரதமர் மோடியிடம் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.