வரும் ஜனவரி 15ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர், FASTag உதவியுடன் டோல்கேட்களில் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. ஜனவரி 15ம் தேதிக்கு பின் FASTag இல்லாமல் டோல்கேட்களில் பயணம் செய்யும் வாகனளுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
சந்தையில் Tag போதுமான அளவு இல்லை என்பதால், இந்த ஜனவரி 15ம் தேதி காலக்கெடுவை, தற்போது மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு FASTag காலக்கெடுவை ஓரளவுக்கு நீட்டிக்க அனுமதிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அதில், டோல் பிளாசாவில் உள்ள அனைத்து பாதைகளிலும் குறைந்தது 75 சதவிகிதம் FASTag மூலம் மட்டுமே கட்டணத்தை ஏற்க வேண்டும். மீதமுள்ள 25 சதவீத பாதைகளில் FASTag மற்றும் வாகன ஊடுனர்களிடம் இருந்து நேரடியாக பணத்தை பெரும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அமைச்சகத்திடம் இன்று (டிசம்பர் 15ம் தேதி) முதல் அடுத்த 45 நாட்களுக்குள் FASTag நடைமுறை நாடு முழுவதும் கட்டாயமாக்கப்படும் என்று கூறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, சந்தையில் FASTags "விநியோக-பற்றாக்குறை" இருப்பதால் முழு நடைமுறையை ஒத்திவைக்குமாறு அமைச்சகத்திற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.
FASTag உள்ள RFID சிப்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒரு இறக்குமதி செயல்முறை முடிவடைய ஆறு வாரங்கள் ஆகும். இந்த கணக்கின் படி, தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு நாளைக்கு சுமார் 30-50,000 FASTag-களை சந்தைக்கு அனுப்பலாம் .
கடந்த வார நிலவரப்படி, FASTag இன்வென்டரி 18 லட்சமாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடி வாகன ஓட்டிகளையும் ஈடுசெய்ய இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று நெடுஞ்சாலை ஆணையம் கருதுகிறது.
இறக்குமதியில் ஏற்படும் காலதாமதம், குறைவான உற்பத்தியில் போன்ற காரணங்களுக்காக சந்தையில் FASTag விநியோக பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதையடுத்து, FASTag காலக்கெடு நீட்டிக்க மத்திய அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.