நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா, தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர்களுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோதல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில், குற்றம் சுமத்தப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட, அங்கு ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
ரோஹித் வெமுலாவின் தற்கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்களின் தூண்டுதல் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையே அவரது தற்கொலைக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிர்த்தி இராணி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் கடும் விமர்சனத்துக்குள்ளாகினர்.
அதையடுத்து, சர்ச்சைக்குள்ளான ரோஹித் வெமுலாவின் தற்கொலை குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஓய்வுபெற்ற அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ரூபன்வால் தலைமையில், தனி நபர் விசாரணை ஆணையத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது.
தற்கொலை குறித்து விசாரணை நடத்திய விசாரணை ஆணையம், கடந்த ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், ஸ்மிர்த்தி இராணி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் மீது எந்த தவறும் இல்லை என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரோஹித் வெமுலா தற்கொலை குறித்த விசாரணையின் இறுதி அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரோஹித் வெமுலா தலித அல்ல என்றும், பல்வேறு விஷயங்களில் ஏற்கனவே அவர் மன அழுத்தத்தில் இருந்தார். அவரது தற்கொலைக்கு தனிப்பட்ட விரக்தியே காரணம் என கூறப்பட்டுள்ளது.
விசாரணை ஆணையத்தின் இந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது போலியான அறிக்கை என காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. மேலும், "அறிக்கை இப்படித் தான் வர வேண்டும் என ஏற்கனவே அரசு முடிவு செய்து விட்ட போது. ஓய்வுபெற்ற நீதிபதியால் என்ன செய்ய முடியும்"? என சாடியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இந்த விவகாரத்தில் பணியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.