Parlimanet Of India: நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வகிப்பது முதல் எம்.பி.க்கள், வி.ஐ.பி-க்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதிசீட்டுகளை வழங்குவது வரை என சி.ஐ.எஸ்.எஃப் (மத்திய தொழில் பாதுகாப்புப் படை) பணியாளர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டுமா என்பதை மதிப்பிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் குழு அமைத்துள்ளது என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.
இந்த பொறுப்புகள் தற்போது நாடாளுமன்ற பாதுகாப்பு சேவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, இது கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான கண்காணிப்பு மற்றும் வார்டு குழுவின் கீழ் செயல்படுகிறது. கடந்த மாதம், நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட டெல்லி காவல்துறையின் 150 பணியாளர்களுக்குப் பதிலாக சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் கொண்டுவரப்பட்டார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டது. அப்போது ஒரு சிலர் நாடாளுமன்ற ஹாலுக்குள் நுழைந்து புகைக் குப்பிகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Should all of Parliament security be with CISF? Panel will examine
இப்போது, சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பை முழுவதுமாக எடுத்துக் கொள்ள முடியுமா என்பதை மதிப்பிடுவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. "கடந்த பல ஆண்டுகளாக, புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் நடைபெறாததால், நாடாளுமன்ற பாதுகாப்பு சேவையின் பலம் எப்படியும் மெல்லியதாக உள்ளது" என்று அறிந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்துறை அமைச்சகம் மே 3 அன்று வெளியிட்ட உத்தரவில், “மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன், நாடாளுமன்ற பாதுகாப்பு சேவையின் பணிகளை மேற்கொள்வதற்கு கூடுதல் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களை ஈடுபடுத்துவதற்காக, நாடாளுமன்ற கட்டிட வளாகத்தை மறு ஆய்வு செய்ய கூட்டு ஆய்வுக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.எஸ்.எஃப் டி.ஐ.ஜி அஜய் குமார் இந்த கூட்டு ஆய்வுக் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் ஒருங்கிணைத்து, விரைவில் அறிக்கையை அளிப்பார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.எஸ்.எஃப் டி.ஐ.ஜி அஜய் குமார் 7 பேர் கொண்ட ஆய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார், இதில் புலனாய்வுப் பணியகம், டெல்லி போலீஸ் மற்றும் நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவின் ஒவ்வொரு பிரதிநிதியும் அடங்குவர்.
சி.ஐ.எஸ்.எஃப் பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படும் கடமைகளையும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது: ராஜ்யசபா மற்றும் லோக்சபா இரண்டிற்கும் மத்திய பாஸ் வழங்கும் பிரிவு (CPIC); எம்.பி.க்கள், விஐபிக்கள், மூத்த அரசு அதிகாரிகள் போன்றோருக்கான அணுகலை ஒழுங்குபடுத்துதல்; லாபிகள் மற்றும் கேலரிகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல்; தற்காலிக பாஸ்களை வழங்குதல்; பிரஸ் கேலரியில் இயக்கத்தை ஒழுங்குபடுத்துதல்; மற்ற பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்தல்; ஜனாதிபதி உரையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள்; ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்கள்; மற்றும் தலைவரின் உதவி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை அதில் அடங்கும்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் கையாள்வதற்காக பிரத்யேக பயிற்சி பெற்ற கண்காணிப்பு மற்றும் வார்டு ஊழியர்களால் இந்த செயல்பாடுகள் கவனிக்கப்படுகின்றன," என்று நாடாளுமன்ற இல்லத்தில் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையால் சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிந்துள்ள லோக்சபாவின் முன்னாள் பொதுச்செயலாளர் பிடிடி ஆச்சாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேஸ்க்கையில், “நாடாளுமன்றம் விமான நிலையம் அல்லது வேறு எந்த பொதுத்துறை நிறுவனத்தையும் போன்றது அல்ல, அதற்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் எம்.பி.க்கள் உள்ளனர்.
நாடாளுமன்ற பாதுகாப்பு என்பது லோக்சபா செயலகத்தின் ஒரு பகுதியாகும், அதன் பணி எம்.பி.க்களின் நலன்களைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதும் ஆகும். இதை எந்த வெளிப்புற பாதுகாப்பு நிறுவனத்தாலும் செய்ய முடியாது. நாடாளுமன்ற பாதுகாப்பு சேவையானது நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டுள்ளது, அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கையாள்வதில் அனுபவம் இல்லாத பாதுகாப்பு நிறுவனத்தால் மாற்ற முடியாது. இது சபாநாயகரின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு அமைப்பின் அமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இருந்தால், அது சபாநாயகரின் வழிகாட்டுதலின் கீழ் செய்யப்பட வேண்டும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் அல்ல. எந்த அமைச்சகத்தாலும் அதை நிறைவேற்ற முடியாது” என்றார்.
செப்டம்பர் 3, 1929 அன்று மத்திய சட்டப் பேரவையின் தலைவராக இருந்த வித்தல்பாய் படேலின் முன்முயற்சியின் மூலம் பார்லிமென்ட் பாதுகாப்பு சேவையானது கண்காணிப்பு மற்றும் வார்டு குழுவை உருவாக்கியது. இது ஏப்ரல் 1929 இல் பகத் சிங் மற்றும் படுகேஷ்வர் தத் ஆகியோரால் மக்களவை அறையில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நடந்தது.
லோக்சபா சபாநாயகரின் கீழ் இந்த குழு சுதந்திரமாக செயல்படுகிறது. ஒரு இணைச் செயலர் (பாதுகாப்பு) முழு நாடாளுமன்ற வளாகத்தையும் கவனிக்கும் அதே வேளையில், ராஜ்யசபா செயலகத்தின் இயக்குநர் (பாதுகாப்பு) மேல் சபையின் மீது செயல்பாட்டுக் கட்டுப்பாட்டையும், மக்களவைச் செயலகத்தின் இயக்குனருக்கு கீழ் சபையின் மீதும் செயல்பாட்டுக் கட்டுப்பாடு உள்ளது. தற்போது, பாராளுமன்ற பாதுகாப்பு சேவையானது "வரலாற்று மற்றும் மதிப்புமிக்க பாராளுமன்ற வளாகத்திற்குள் மக்கள், பொருட்கள் மற்றும் வாகனங்களின் அணுகல் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை மேலாண்மைக்கு மட்டுமே பொறுப்பாகும்".
டிசம்பர் 13, 2001 நாடாளுமன்றத் தாக்குதலை முறியடிப்பதில் அதன் பணியாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அதில் இருவர் - மத்பர் சிங் நேகி மற்றும் ஜகதீஷ் பிரசாத் யாதவ் - தங்கள் உயிரைக் கொடுத்தனர்.
நிறைவேற்று அதிகாரத்தில் இருந்து சுயாதீனமான விசேஷ பயிற்சி பெற்ற குழுவொன்றை நாடாளுமன்றம் கொண்டிருப்பது முக்கியம் என அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். "அன்றைய அரசாங்கம் பாராளுமன்றத்திற்கான அணுகலை மட்டுப்படுத்தவோ, பாராளுமன்றத்தின் மீது அதன் பாதுகாப்பை திணிக்கவோ அல்லது பாராளுமன்றத்தின் வளாகத்தை பயன்படுத்துவதை மட்டுப்படுத்தவோ இல்லை என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்" என்று அந்த அதிகாரி கூறினார். அரசியலமைப்பின் 98 வது பிரிவு ஒவ்வொரு சபைக்கும் தனித்தனி செயலக ஊழியர்களைக் கட்டாயப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“