அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு -காஷ்மீர் மாநில ஆளுங்கட்சி எம்எல்ஏ-வின் ஓட்டுனரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி உள்ளார்.
இந்நிலையில், கடந்த 10-ம் தேதியன்று நடைபெற்ற அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பாக, ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் எம்எல்ஏ அஜாஸ் அகமது மிர் என்பவரது ஓட்டுனரும், காவலருமான தௌசீஃப் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்வாமாவை சேர்ந்த இவர் போர்க்குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். அதேசமயம், அமர்நாத் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யபட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஐ.ஜி.பி முனீர் கான் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநில போலீஸ் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த தௌசீஃப் அகமது, மக்கள் ஜனநாயகக் கட்சியின் எம்எல்ஏ அஜாஸ் அகமது மிர்-ன் ஓட்டுனராக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டார். அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
முன்னதாக, அமர்நாத் யாத்திரை சென்று விட்டு குஜராத் மாநில யாத்ரீகர்கள், ஜம்முவுக்கு கடந்த கடந்த 10-ம் தேதி இரவு பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பேருந்து அனந்தநாகின் கானாபால் எனுமிடதுக்கு வந்த போது, அதன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் ஆறு பேர் உள்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.