/tamil-ie/media/media_files/uploads/2017/07/India-China-1.jpg)
எல்லையில் நிலவி வரும் தொடர் பதற்றத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என இந்திய மற்றும் சீன அரசுகளுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பெண்டகன் அறிவுறுத்தியுள்ளது.
வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையில், இந்தியா - சீனா - பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் இணைகின்றன. இந்த பகுதியில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டது.
சர்ச்சை நிலவி வரும் இந்த இடத்திற்கு பூடான் உரிமை கொண்டாடுகிறது. இதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. மேலும்,"சிக்கன்ஸ் நெக்" அல்லது "சிலிகுரி காரிடார்" எனப்படும் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை ஏனைய இந்தியாவுடன் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிலபரப்பை சீனா எளிதாக சென்றடைய இது வழி செய்யும் என்பதால் இந்தியா கவலை கொண்டுள்ளது.
இதனையடுத்து, சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. அங்கு ராணுவ வீரர்களை குவித்தது. பதிலுக்கு சீனாவும் தங்களது ராணுவத்தை அங்கு குவித்துள்ளது. இதனால், எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு நேரடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பெண்டகன் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் கேரி ரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"எல்லையில் நிலவும் பதற்றத்திற்கு இந்திய அரசும், சீன அரசும் நேரடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கான வேண்டும். இந்த விஷயத்தில் ஊகங்களில் அடிப்படையில் நாங்கள் செல்லப்போவதில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.