இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இன்று (டிசம்பர் 25) தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் நண்பர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் பண்டிகையை கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர்.
வீடுகளில் ஸ்டார் ஏற்றி, வண்ண விளக்குகளால் அலங்கரித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பாடங்கள் பாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
இந்த சிறப்பு நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் உன்னத எண்ணங்களையும் அவரின் சேவையையும் இந்நன் நாளில் நினைவு கூர்வோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "அன்பின் பேரொளியாய் அவனியை நிறைத்த இயேசுபிரான் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/