டெல்லியில் இன்று நடந்த இந்தியா - துருக்கி வர்த்தக உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கையில் அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை அதிகரிக்க வேண்டும் எனவும், இந்தியாவில் கணிசமான முதலீடு செய்யவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வில், துருக்கி அதிபர் ரேக்கப் தயிப் எர்டோகனும் கலந்து கொண்டார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், புதிய இந்தியாவை உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். வேலை செய்வதும், தொழில் தொடங்குவதும் எளிதாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதில் சீர்திருத்த கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன. இதில், நாங்கள் நிறைய வெற்றியையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளோம். உலகளவில் எங்களது தரவரிசை முன்னேறியுள்ளது. இருப்பினும், இந்த பணி தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். இந்தியாவை ஒரு சிறந்த இடத்திற்கு கொண்டு வரவும், மக்கள் தங்களுடைய ஆற்றலை உணரவும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
மேலும், கடந்த எட்டு ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான வர்த்தக உறவுகள், பொருளாதார உறவுகள் அதன் முழு திறனை அடைந்துவிடவில்லை. உலக பொருளாதாரங்களில் டாப் 20-ல் இந்தியாவும், துருக்கியும் இடம்பெற்றுள்ளன. உலகளவில் இருந்த நீர்த்து போன பொருளாதார நிலையிலும் கூட, இருநாடுகளின் பொருளாதாரங்கள் நிலையான தன்மையில் இருந்தன. எங்களது பொருளாதார வாய்ப்புகள் பற்றி நாம் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று கூறினார்.
இரண்டு நாடுகளின் மக்களுக்கிடையேயான ஒரு நல்லெண்ணம் உள்ளது. பொருளாதார உறவுகள் ஆழமடைவதற்கு நேரம் வந்துவிட்டது. இருதரப்பு வர்த்தக ஈடுபாடு அதிகரிக்க பெரும் சாத்தியம் உள்ளது. இது வர்த்தக மற்றும் வெளிநாட்டு முதலீடுகள், தொழில்நுட்ப இணைப்புக்கள் மற்றும் பல்வேறு திட்டங்களில் ஒத்துழைப்பு மூலம் சாத்தியமாகும். சில பகுதிகளில் துருக்கிய நிறுவனங்களின் பங்களிப்பில் சில அதிகரிப்பு காணப்படுகிறது, என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் கட்டமைப்பு எவ்வாறு நவீனமயமாக்கப்படுவதை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். "நாங்கள் எங்கள் ரயில்களை நவீனப்படுத்தி, எங்கள் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துகிறோம். இந்த இரண்டு பிரிவுகளுக்கும் அதிகபட்ச ஒதுக்கீடுகளை நாங்கள் செய்துள்ளோம். இந்தியாவும் துருக்கியும் ஆற்றல் குறைபாடுடையவை, நமது ஆற்றல் தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் துறை இருதரப்பு உறவுகளின் முக்கியமான தூணாக உள்ளது" என்றும் கூறினார்.
சுற்றுலா மற்றும் வர்த்தகம் குறித்து மோடி பேசியபோது, "நாங்கள் புதிய துறைமுகங்களை உருவாக்கும் அதேவேளையில், பழைய துறைமுகங்களை சாகர்மலா திட்டத்தின் அடைப்படையில் புதுப்பித்து வருகிறோம். இத முறையில் பழைய விமான நிலையங்களையும் புதுப்பித்து வருகிறோம். துருக்கிய சுற்றுலாத்துறை உலகளவில் புகழ்பெற்றது. கடந்த சில ஆண்டுகளில் துருக்கிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இது இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் துறை படப்பிடிப்புக்கு பிரபலமானது. இந்த பகுதியில் பரந்த வாய்ப்புகளை ஆராய வேண்டும். பிராந்திய சினிமா தொழிலுக்கு நாம் சென்றடையலாம்" என்றார்.