/indian-express-tamil/media/media_files/2025/04/05/qzwN2V6QTUqCogmTJZ1T.jpg)
மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசாநாயக்க, உயரிய விருதான 'மித்ர விபூஷன்'-ஐ இன்று (ஏப்ரல் 5) வழங்கினார். மேலும், இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
இலங்கை அதிபருக்கு நன்றி தெரிவித்த மோடி, "இந்த விருது மிகவும் பெருமைக்குரிய விஷயம்" என்று கூறினார்
"இந்த கௌரவம் எனக்கானது மட்டுமல்ல; 140 கோடி இந்திய மக்களுக்கும் சொந்தமானது. இது இந்திய - இலங்கை மக்களுக்கு இடையேயான வரலாற்று மற்றும் ஆழமான நட்புறவுக்கான மரியாதை ஆகும். இலங்கை அரசு, அதிபர் திசாநாயக்க மற்றும் இலங்கை மக்களுக்கு என் மனமாந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மோடி தெரிவித்தார்.
"பிரதமர் என்ற முறையில், இலங்கைக்கு இது எனது நான்காவது பயணம். 2019-ஆம் ஆண்டு எனது முந்தைய பயணம் மிகவும் உணர்ச்சிகரமான தருணத்தில் இருந்தது. இலங்கை உயர்ந்து மேலும் வலுப்பெறும் என்று எனக்கு அப்போதே நம்பிக்கை இருந்தது. இங்குள்ள மக்களின் தைரியத்தையும், சகிப்புத்தன்மையையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். இன்று, இலங்கையை மீண்டும் முன்னேற்றப் பாதையில் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது" என்று மோடி குறிப்பிட்டார்.
இலங்கைக்கான இந்தியாவின் பங்களிப்புகளை பாராட்டிய மோடி, "ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும், இந்தியா இலங்கையுடன் நின்றது. 2019-ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல், கோவிட் தொற்றுநோய் மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடி என அனைத்தும் இதில் அடங்கும்" என்றும் மோடி கூறினார்.
"அதிபர் திசநாயக்க, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார். அவருடைய முதல் வெளிநாட்டு விருந்தினர் என்ற பெருமை எனக்குக் கிடைத்தது. இது நமது இருதரப்பு உறவுகளின் ஆழத்தைப் பிரதிபலிக்கிறது" எனவும் மோடி கூறியுள்ளார்.
இதேபோல், "பிரதமர் மோடியின் இந்த பயணம், இந்தியா மற்றும் இலங்கை இடையேயான உறவுகளின் நெருக்கத்தையும், நட்பையும் பிரதிபலிக்கிறது. இலங்கையும், இந்தியாவும் புவியியல் நெருக்கத்தை மட்டுமன்றி பலவற்றையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்கள் கொண்டு செயல்படுகிறோம்" என்று திசநாயக்க தெரிவித்தார்.
"தேவையான காலங்களில் இலங்கைக்கு, இந்தியா அளித்து வரும் உதவிகள் மற்றும் தொடர்ச்சியான பங்களிப்புக்கு மோடியிடம் நன்று கூறினேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்
இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. திரிகோணமலையை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். மேலும், இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்திற்கு, புது டெல்லியின் பல்துறை மானிய உதவிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டனர்.
மற்ற உடன்படிக்கைகளுக்கு முத்திரை பதித்ததைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, பிரதமர் மோடி இலங்கை வந்தடைந்தபோது, தலைநகர் கொழும்பின் மையத்தில் உள்ள நாட்டின் சுதந்திர சதுக்கத்தில் அவருக்கு முப்படையினரின் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு வழங்கப்படும் முதல் மரியாதை என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
BIMSTEC உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட மோடி தனது பாங்காக் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு வந்த ஒரு நாள் கழித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதேபோல், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மீனவர்களை அவர்களின் படகுகளுடன் சேர்த்து உடனடியாக விடுவிக்க இந்திய தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நாங்கள் ஒத்துக் கொண்டோம்" என்று மோடி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.