மலைப் பிரதேசமான மணிப்பூர், கங்கை பாய்ந்தோடும் உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம், கடற்கரையையொட்டிய மாநிலமான கோவா ஆகிய 4 திசைகளிலிருந்தும் பாஜகவுக்கு ஆசிர்வாதம் கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாட்டின் மிக முக்கியமான தேர்தல் எனக் கருதப்பட்ட 5 மாநில சட்டபேரவைத் தேர்தலில் மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்று அந்த மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது.
கொரோனா காரணமாக வேலை இழப்பு, கொரோனா பெருந்தொற்று என பல விவகாரங்களில் விமர்சிக்கப்பட்டுவந்த பாஜகவுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியை வழங்கியுள்ளது.
இத்தகைய மாபெரும் வெற்றி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரளான பாஜகவினரும் வெற்றி விழாவில் கலந்து கொண்டனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களின் சவால்களும் பிரச்சனைகளும் வெவ்வேறானவை. அவற்றின் வளர்ச்சிப் பயண பாதையும் வேறானவை.
ஆனால் பொதுவானது என்னவென்றால் அந்த மாநிலங்களை பாஜக கொள்கைகள் மற்றும் நோக்கங்களில் ஒரே இடத்தில் இணைக்கிறது.
கட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைதான் இந்த வெற்றி.
ஏழைகளுக்கான அரசு
ஏழைகளுக்காக பாஜக எப்போதும் செயல்படும். அடிப்படை தேவைகளுக்காக அரசாங்கத்தின் கதவுகளை தட்டித்தட்டி ஏழைகள் களைப்படைந்து விட்டனர். மின் இணைப்பு, தொலைபேசி இணைப்பு என எதற்கும் லஞ்சம் கொடுக்கும் நிலை இருந்தது.
ஆனால், பாஜக ஆட்சியில் நல்லாட்சி மட்டுமே நடக்கும். இது ஏழைகளுக்கான ஆட்சியை புரியும். ஏழை மக்களுக்கானது தான் எங்களின் ஆட்சி என்பதை பாஜக நன்கு புரிந்து வைத்திருக்கிறது.
எங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். அரசு திட்டங்கள் அனைத்தும் ஏழைகளை சென்று சேரும் என்பதை உறுதிப்படுத்துவோம். ஏழைகளுக்கான உரிமைகள் அவர்களுக்கு சென்று சேரும் வரை என்னால் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருக்க முடியாது. 100 சதவீத பயனாளிகள் என்ற இலக்கை எட்டுவதற்காக பாஜக உழைக்கும்.
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் முன்வந்து வாக்களித்திருக்கின்றனர். பாஜகவை பெண்கள் வெற்றி பெற செய்திருக்கின்றனர். நான் எந்தவொரு குடும்பத்துக்கும் (சமாஜ்வாதி கட்சி) எதிராக இல்லை. நான் ஜனநாயகத்தை பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறேன்.
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி
வாரிசு அரசியல் மாநிலங்களை பின்னோக்கி அழைத்து சென்று விடுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதை இந்தத் தேர்தலில் மக்கள் புரிந்து கொண்டனர். ஜனநாயகத்தை வலிமைப்படுத்த மக்கள் வாக்களித்துள்ளனர்.
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான விவாதங்கள் ஜனநாயக நாடான இந்தியாவில் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒரு நாள் நிச்சயம் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று நம்புகிறேன். 2022 தேர்தல் முடிவுகள் 2024 தேர்தல் (மக்களவைத் தேர்தல்) முடிவைத் தீர்மானித்துவிட்டன என்பதை பண்டிட்டுகள் தைரியமாக கூறலாம் என்று பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் கூறுகையில், டெல்லியில் முதலில் புரட்சி ஏற்பட்டது. தற்போது பஞ்சாபிலும் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்தப் புரட்சி பரவும் என்றார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.