கேரளாவில் பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டபோது அதனை முகநூலில் நேரலை செய்து பதிவேற்றிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆதிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டதாவது:
கேரளாவை சேர்ந்த அப்பெண் துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரை, லினு என்ற 23 வயது இளைஞர் திருமணம் செய்துகொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டார். மேலும், அதனை முகநூலில் நேரலையாக பதிவேற்றியது தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், உணவகம் ஒன்றில் பணிபுரியும் லினு என்ற இளைஞரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இந்நிலையில், சனிக்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
லினு - PC: Mathrubhumi
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது, புகார் அளித்த பெண்ணுக்கு ஏற்கனவே வேறொருவருடன் திருமணமாகி குழந்தை இருப்பதாகவும், கடந்த சில மாதங்களாக லினுவுடன் அப்பெண் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆதிமலை காவல் நிலைய ஆய்வாளர் கே.சாபு, The News Minute இணையத்தளத்துக்கு கூறியதாவது, ”முகநூலில் தனக்கு அதிக லைக்குகள் வர வேண்டும் என்பதற்காக இச்செயலை செய்ததாக கைதான லினு வாக்குமூலம் அளித்தார். அவர்களுக்கிடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டு, அதற்காக அப்பெண்ணை பழிவாங்கவும் இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அந்த சம்பவத்தை வீடியோவாக எடுப்பது அப்பெண்ணுக்கு தெரியும் எனவும், ஆனால், அதனை முகநூலில் தான் பதிவேற்றியது அவருக்கு தெரியாது எனவும் கைதான லினு தெரிவித்தார்”, என கூறினார்.
இதனிடையே அப்பெண்ணின் சகோதரிகள் இருவரும், பதிவேற்றப்பட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைதான லினு இத்தகைய வீடியோக்களை ஏற்கனவே எடுத்திருந்தது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்ஃபோனில் இருந்து தெரியவந்துள்ளது.