தங்களை மதசார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் சொந்த அடையாளமே தெரியவில்லை என்று கூறிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டேவுக்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஜஸ்ட் ஆஸ்கிங்' என்ற ஹேஷ்டேக் மூலம் மத்திய, மாநில அரசுகள் மீது தனக்கு இருக்கும் அருப்தியை கேள்விகளாக எழுப்பி வருகிறார்.
சமீபத்தில் கூட குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றிப் பெற்றது குறித்து தனது ட்விட்டரில், "அன்புள்ள பிரதம மந்திரி, வெற்றிக்கு வாழ்த்துக்கள் ... ஆனால் நீங்கள் உண்மையில் சந்தோஷமாக இருக்கிறீர்களா?" என கேள்வி எழுப்பி இருந்தார். இவரது கேள்விகள் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகின்றன.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் குகானூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, மக்கள் தங்களை தங்களின் மத அடையாளத்தோடு பெருமையோடு அழைத்துக் கொள்ள வேண்டும். தங்களை மதசார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் சொந்த அடையாளமே தெரியவில்லை. அரசியல் சாசனத்தில் மதசார்பற்ற என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அரசியல் சாசனம் பல முறை மாற்றப்பட்டிருக்கிறது என்றார். மேலும், மதசார்பற்ற என்ற வார்த்தையும் மாற்றப்படும் என்றும் அதை மாற்றுவதற்காகவே தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், மதசார்பற்றவர்களின் பிறப்பை கேவலப்படுத்துவதா எனக் கொந்தளித்துள்ளார்.
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்துக்கொண்டு மக்களையே கேவலப்படுத்துவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் கேட்டுள்ளார். பிற மதங்களை திட்டுவது, மதசார்பற்றவர்களை கேவலமாக பேசுவது உள்ளிட்டவைகளிலிருந்து எப்போது விடுபடுவீர்கள் எனவும் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.