திரைப்பட நடிகர்கள் அரசியல் கட்சித் தலைவர்களாக உருவெடுப்பது நாட்டிற்கு பேரழிவு என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் தொடர்பாக கடும் கண்டம் தெரிவித்திருந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து சாடியிருந்தார். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்தும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது நாட்டிற்கு பேரழிவு என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்திப்பில் பிரகாஷ் கூறும்போது: எந்த வித அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. அரசியல் களத்திற்குள் நடிகர்கள் இறங்குவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியல் தலைவர்களாக திரைப்பட நடிகர்கள் மாறுவது எனது நாட்டிற்கு பேரழிவு என்றே கருதுகிறேன். சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் பாடப்படுவது தற்போது நடைமுறையில் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் சினிமா தியேட்டர்களில் எழுந்து நின்று தான் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறியதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, தான் கூறியது தவறாக முறையில் புரிந்துகொள்ளப்பட்டது என்றும், உண்மையில் தான் கூறியது இதுதான் என்று ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: பிரபலமானவர்கள் என்பதினால் மட்டுமே நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது. அப்படி வரும் பட்சத்தில் அது பேரழிவாக இருக்கும். நாட்டில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் தெளிவான குறிக்கோளுடன் அரசியலுக்கு வந்து, மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். மேலும், ரசிகர்கள் என்ற முறையில் வாக்களிக்காமல், குடிமக்கள் என்ற முறையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்.