நேற்று நடந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நடத்திய இந்த பயங்கரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இதில் தமிழக வீரர், சுப்பிரமணியனும் ஒருவர். இவர் தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரியைச் சேர்ந்தவர். இவரது மரணத்தைக் கேள்விப்பட்ட சவலப்பேரி மக்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ”சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வெண்டும்” என சுப்பிரமணியனின் தந்தை கணபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் மரணமடைந்த மற்றொரு தமிழக வீரர், அரியலூர் மாவட்டம், கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன். இவர்கள் இருவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இருவரின் குடும்பத்துக்கும் தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.