/tamil-ie/media/media_files/uploads/2017/06/rahul-gandhi-7592.jpg)
மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் மரணம் அடைந்த விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல சென்ற, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், விளை பொருட்களுக்கு உரிய தொகை கிடைக்க வழி செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டாக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 5 விவசாயிகள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து போராட்டம் மாநிலமும் முழுவதும் பரவி வருகிறது.
துப்பாக்கிசூட்டில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் சொல்ல, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மபி மாநிலம், மண்ட்சவூர் மாவட்டத்துக்கு இன்று வந்தார். அங்கிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை பார்க்க புறப்பட்டார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி அவர் புறப்பட முயன்ற போது, போலீசார் அவரை கைது செய்தனர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, ’மோடி அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய கேட்டால், தோட்டாக்களை பரிசாக கொடுக்கிறார். நரேந்திர மோடி நாட்டில் உள்ள செல்வந்தர்களின் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்வார். ஆனால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யமாட்டார்’ என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.