10 வருட தீவிர முயற்சியில் நாங்கள் காஷ்மீரிரில் அமைதியை நிலைநாட்டிய நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதனை ஒரே மாதத்தில் சீர்குலைத்துவிட்டது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திரா கேன்டீன்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று(16.08.17) திறந்து வைத்தார். பின்னர் கட்சி தொண்டர்களுடனான கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அதில் பிரதமர் நரந்திர மோடியின் சுதந்திர தின உரை குறைத்து கடுமையாக விமர்சித்தார். பிரதமர் நேரந்திர மோடி சுதந்திர தின உரையாக 57 நிமிடங்கள் மட்டுமே பேசினார். கடந்த 4 ஆண்டுகளில் இது தான் அவரது குறைந்தபட்ச நேர உரையாகும். இதன் மூலம் வெளிப்படையாக தெரிவது என்னவென்றால் உரை நிகழ்த்துவதற்கு எதுவுமே இல்லாததால் தான், நரேந்திர மோடி தனது உரையை குறைத்திருக்கிறார் என்பது விளங்குகிறது.
நரேந்திர மோடி ஆண்டுடொன்றுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று கூறியிருந்தார். ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை உச்சகட்டத்திற்கு சென்றுள்ளது. இதனை தனது சுதந்திர தின உரையில் நரேந்திர மோடி குறிப்பிடவில்லை.
ஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தீவிர நடவடிக்கை எடுத்து வந்தோம். 10 வருட தீவிர முயற்சியினால் நாங்கள் ஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிய நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதனை ஒரே மாதத்தில் சீர்குலைத்துவிட்டது.
இந்தியாவிற்கு வந்த சீன அதிபரை, பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்றபோது, ஆயிரக்கணக்கான சீன வீரர்கள் நமது எல்லைக்குள் நுழைந்துவிட்டனர். இன்னமும், சீன படைகள் பூடான் பகுதியில் இருந்து வருகிறது.
கோரக்பூரில் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததற்கு, அவரது சுகாதார கொள்கை தான் காரணம் என்பதை மோடி அவரது உரையில் குறிப்பிடவில்ல. அவரது அரசு சுகாதாரத்துறைக்கான பட்ஜெட்டை குறைத்ததால் தான், மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டரை வாங்க முடியவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.