சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலத்தில் சென்றுகொண்டிருந்த பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அதில் பயணி ஒருவரின் உணவுப் பொட்டலத்தில், பல்லி ஒன்று இறந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பயணி, இது தொடர்பாக ரயில்வே அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக புகார் செய்தார்.
ஏற்கனவே ரயில்வே வழங்கும் உணவுகள் தரமற்றதாக உள்ளது என புகார் எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவம் மேலும் அந்த புகாரை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
இந்நிலையில், ரயில்வே வாரிய சேர்மேன் ஏகே மிட்டல் அளித்துள்ள பேட்டியில், "ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தில் ஒப்பந்தக்காரர்களால் சமரசம் செய்துக் கொள்ளப்படுவதால், பயணிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு நாளும் சுமார் 15 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ரயில் உணவுகள் குறித்து நிறைய புகார்கள் வருகிறது.
வீட்டு உணவிற்கு மாறான தரமான உணவு எங்கும் கிடையாது. எனவே, வீட்டில் இருந்தே பயணிகள் உணவை தயார் செய்து எடுத்து வந்துவிடலாம்" என அறிவுரை கூறியுள்ளார்.
மேலும் அவர், "ரயில்வே மிகவும் தீவிரமான சவாலை எதிர்க்கொண்டு உள்ளது. இப்பிரச்சனைகளை சரிசெய்வதற்கான நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. சொந்தமான சமையல் அறைகளை ஏற்படுத்த ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஒரு வருடத்திற்குள் இது செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கின்றோம்.
குறிப்பாக, இ-கேட்ரிங் மீதும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, இ-கேட்ரிங் மூலம் பயணிகள் உணவுப்பொருட்களை ஆர்டர் செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள்" எனவும் மிட்டல் தெரிவித்துள்ளார்.