ரயிலில் கீழ்படுக்கையில் படுக்க ஏற்பாடு செய்து தரப்படாததால், ரயிலில் தரையில் படுத்துறங்கிய மாற்றுத் திறனாளி வீராங்கனை சுவர்ணா ராஜ்-க்கு NCPEDP-Mphasis யுனிவர்சல் டிசைன் விருது அறிவிக்கப்பட்டது.
போலியோ காரணமாக 90 சதவீதம் பாதிக்கப்பட்ட சுவர்ணா ராஜ் சர்வதேச அளவில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீராங்கண. தாய்லாந்து பாரா டேபிள் டென்னிஸ் ஓபன் 2013-ல் சுவர்ணா ராஜ் பதக்கம் வென்றவர். தென் கொரியாவில் நடந்த ஆசியன் பாரா விளையாட்டு போட்டியில் கலந்துக் கொண்டவர். அவர் மாற்று திறனாளிகளுக்காக தொண்டு நிறுவன்ம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு பா.ஜனதா வேட்பாளிடம் தோல்வி கண்டவர்.
அண்மையில், சுவர்ணா ராஜ் நாக்பூர் - டெல்லி கரீப் ராத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது, அவருக்கு மேல் படுக்கையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதில் ஏறி அவரால் படுக்க முடியாது என்பதால், கீழ் படுக்கையில் இடம் ஒதுக்கி தருமாறு டிக்கெட் பரிசோதகரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
அதனால், ரயிலின் தரையிலேயே அவர் படுத்து உறங்கினார். மேலும், அவர் கழிவறை செல்லக்கூட யாரும் உதவிபுரியவில்லை என குற்றம்சாட்டினார். அச்சம்பவத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் சுவர்ணா ராஜ் வெளியிட்டு அதனை இந்திய ரயில்வே துறைக்கு டேக் செய்தார். மேலும், “ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ரயிலில் தரையில் படுத்து உறங்கினால்தான் என்னுடைய இன்னல் புரியும்.”, எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு NCPEDP-Mphasis யுனிவர்சல் டிசைன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரும் 14-ஆம் தேதி மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வழங்கவிருக்கிறார்.
சுவர்ணா ராஜ் கடந்த 2014-ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து தேசிய ரோல் மாடல் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வே துறையை கடுமையாக விமர்சித்த சுவர்ணா ராஜ்-க்கு அத்துறை அமைச்சராலேயே விருது வழங்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.