நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கவுள்ளார். புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக கடந்த 2012-ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜி (81) பதவியேற்றார். அவரது பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதனிடையே, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் பிகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் களமிறங்கினர். நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கவுள்ளார். புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் ராணுவ அணிவகுப்புடன் நாடாளுமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்படுவார். அங்கு பிரதமர் மோடி உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அவரை வரவேற்பார்கள். தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கெஹர், ராம்நாத் கோவிந்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
பதவியேற்புக்குப் பின்னர் அவர் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு பாரம்பரிய நடைமுறைகள் அழைத்துச் செல்லப்படுகிறார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் ராஜபாதையில் கடந்த சில தினங்களாக நடைபெற்றன.
குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பல்வேறு மாநில முதல்வர்களும் பங்கேற்கின்றனர். விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார். முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பிரமுகர்களும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜன், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரணாப், அரசியலமைப்பைக் காக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அமளி, வெளி நடப்பால் நாடாளுமன்றத்தில் பயனுள்ள நேரம் வீணடிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தார். சில சோகங்களையும், வானவில் போன்ற வண்ணமயமான நினைவுகளையும் சுமந்துகொண்டு வெளியேறுகிறேன். மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் விடைபெறுகிறேன் என்றும் பிரணாப் நெகிழ்ச்சி தெரிவித்தார்.