ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கான தீர்மானம், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் - காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஆட்சியை பிடித்தது. முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக, ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சித் தலைவரான லாலுவின் மகன் தேஜஸ்வியும் பதவியேற்றனர்.
ஆட்சியை பிடித்தது முதலே, ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்ட்ரீய ஜனதாதளம் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது. இந்த சூழலில் தேஜஸ்வி, லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. ஊழல் புகார் காரணமாக இந்த சோதனை நடைபெற்றதாக சிபிஐ கூறியது. ஆனால், அரசியல் பழிவாங்கல் காரணமாக இந்த சோதனை நடைபெற்றதாக பாஜக மீது லாலு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என நிதிஷ் வலியுறுத்தி வந்தார். ஆனால், தேஜஸ்வி பதவி விலக மறுப்பு தெரிவித்த காரணத்தால், தனது பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். ஆனால், ராஜினாமா செய்த 24 மணி நேரத்துக்குள்ளாகவே, பாஜக ஆதரவுடன், பீகார் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார்.
நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ் கடும் அதிருப்தி தெரிவித்தார். அதனையடுத்து, ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சரத் யாதவ் நீக்கப்பட்டார்.
பாஜக-வுடன் கைகோர்த்துக் கொண்டு பீகார் மாநில மக்களுக்கு நிதிஷ் துரோகம் விளைவித்து விட்டார் எனவும், ஆட்சிப் பதவியில் இருக்கும் கட்சியினர் மட்டும் தான் நிதிஷ் பக்கம் உள்ளனர். உண்மையான கட்சித் தொண்டர்கள் என்னுடன் தான் உள்ளனர். நான் மெகா கூட்டணியின் பக்கம் தான் உள்ளேன் என சரத் யாதவ் தெரிவித்துள்ளார். அவரது ஆதரவாளர்கள் நிதிஷ்குமாருக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவதால், ஐக்கிய ஜனதாதளக் கட்சிக்குள் சிறு பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் பாட்னாவில் உள்ள நிதிஷ்குமார் இல்லத்தில் இன்று நடைபெற்றது. அதில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளக் கட்சி இணைவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, நிதிஷ்குமார் இல்லம் முன்பு திரண்ட சரத் யாதவ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமாறு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மேலும், ஐக்கிய ஜனதாதளக் மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.