ராணுவ தூண்டுதலை மேற்கொண்டால் இந்தியா 1962-ம் ஆண்டு சந்தித்ததை விட அதிக இழப்பை சந்திக்க நேரிடும் என சீன ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சிக்கிம் எல்லைப் பிரச்சனை விவகாரத்தில், இந்திய படைகள் சீன எல்லைக்குள் நுழைந்ததாக சீனா குற்றம்சாட்டியது. மேலும், இந்த விவகாரத்திரல், இந்தியா வரலாற்றுப் பாடத்தை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதற்கு பதிலளித்த அருண்ஜெட்லி, 1962-ல் இருந்த இந்தியா வேறு தற்போது இருக்கும் இந்தியா வேறு என்று சீனாவிற்கு பதிலடி கொடுத்தார்.
இதற்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெய் ஷூவாங் பதிலளிக்கும் போது: அருண் ஜெட்லி கூறுவது போல தான் சீனாவும் உள்ளது. எங்கள் நாட்டின் இறையாண்மையை காக்க வேண்டும் என்றால் அதற்கான நடவடிக்கையை எடுப்போம் என்று மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் சீன பத்திரிக்கை ஒன்றின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: இந்திய படைகள் சிக்கிமில் உள்ள தோக்கலாம் பகுதியில் இருந்து இந்திய படைகள் வெளியேற வேண்டும் அல்லது இந்திய படைகள் வெளியேற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக சீன ஊடகங்களான குளோபல் டைம்ஸ், சீனா டெய்லி ஆகியவை இந்தியா கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளன.
இது தொடர்பாக குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எல்லைப்பிரச்சனை விவகாரத்தில் இந்தியா மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டால், கடந்த 1962-ம் ஆண்டு சந்தித்த இழப்பைக் காட்டிலும் இந்தியா அதிக இழப்பை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளது. மேலும், சீனா ராணுவத்திற்கு, சீன எல்லையில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றும் பலம் இருக்கிறது. அதனால், இந்திய படைகள் தானாகவே வெளியேறுவது சிறந்தது. அல்லது சீன ராணுவம் இந்திய படைகளை வெளியேற்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் இந்திய ராணுவ ஜெனரல் தளபதி பிபின் ராவத் கூறும்போது, இந்தியா இரண்டரை போருக்கு தாயாராகிறது என்று கூறியிருக்கிறார். அவரது பேச்சின் படி அது, பாகிஸ்தான், சீனா மற்றும் உள்நாட்டு விவகாரங்களுக்கு தேவையான பாதுகாப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது.
இந்திய படைகள் அத்துமீறி சீக்கிம் எல்லைப்பகுதியில் உள்ள சீன பகுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய ராணுவம் ஒவ்வொரு முயையும் வித்தியாசமான பதிலை அளிக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிகழ்வுகளை எல்லாம் சர்வதேச நாடுகள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த விவகாரத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சீன ஊடகங்கள் இது போன்ற கருத்தை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.