ஆக்ராவில், உடல் நலக்குறைவால் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த தன் இளைய சகோதரருக்கு சகோதரி ஒருவர், சிறுநீரகத்தை தானம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் வந்தனா சந்திரா (வயது 48). இவருடைய இளைய சகோதரர் விவேக் சாராபாய் (வயது 38) என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அவருக்கு சிறுநீரகம் தானம் செய்பவர்கள் யாராவது உள்ளனரா என அலைந்து பார்த்தனர். இதையடுத்து, அவரது சகோதரி வந்தனா சந்திரா தானாக முன்வந்து சிறுநீரகம் தானம் அளிக்க முன்வந்தார். தன் குடும்ப பொறுப்புகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தன்னுடைய சகோதருக்காக சிறுநீரகம் தானம் அளித்தார்.
அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. திங்கள் கிழமை தன் சகோதரியுடன் அவர் மகிழ்வாக ரக்ஷா பந்தன் கொண்டாட உள்ளார்.
இதுகுறித்து விக்ரம் சராபாய் கூறுகையில், “எனக்காக சிறுநீரகம் தானம் செய்ய யாராவது இருக்கிறார்களா என பல மருத்துவமனைகளில் அலைந்து தேடி பார்த்தோம்.ஆனால், யாருமே கிடைக்கவில்லை. அதன்பிறகு எனக்கு சிறுநீரகம் தானம் செய்ய எனது சகோதரி முன்வந்தார். அவர் எனக்கு இரண்டாவது பிறவியை அளித்துள்ளார்.” என கூறினார்.
அவரது சகோதரி வந்தனா சந்திரா கூறுகையில், “நான் என் சகோதரனை அன்பு செய்கிறேன். என்னுடைய கஷ்டமான காலங்களில் அவன் என்னுடன் இருந்திருக்கிறான். எனக்கு அவன் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியம். அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்துகொள்ள வேண்டும். அதனால், பல உயிர்கள் காப்பாற்றப்படும். ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதை விட முக்கியமானது வேறேதும் இல்லை.”, என தெரிவித்தார்.