நீட் தேர்வுக்க எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர் அரியலூர் மாணவி அனிதா. நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அனிதா விரக்தியடைந்தார். அனிதா 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த அனிதா, மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய - மாநில அரசுகள் தான் பொறுப்பு என எதிர்க்கட்சிகள் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அனிதா தற்கொலை செய்து கொண்ட தினமே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடிக்கத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் 8-வது நாளாக கல்லூரி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தை இன்றும்(வெள்ளிக்கிழமை) தொடர்ந்தனர்.
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை இன்று(வெள்ளிக்கிழமை)விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதித்தது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக எந்தவித போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது. போராட்டம் நடத்துவது என்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகவே எடுத்துக்கொள்ளப்படும். கடையடைப்பு, சாலைமறியல், என எந்தவித போராட்டத்தையும் நடத்தக்கூடாது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்பது மாநில அரசின் கடமை என்பதால், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இதனை அரசு கையாள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.