காவிரி வழக்கில் தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், புதுவை கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 27 நாட்களாக உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தமிழகம், புதுவை கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தங்களது இறுதி வாதத்தை முன் வாய்த்த நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு தனது வாதத்தை முன்வைத்தது.
இந்நிலையில், புதன் கிழமை மூன்று நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்து தரப்பிலான வாதங்களை அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், காவிரி வழக்கில் மாநில அரசுகள் சார்பில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. காவிரி வழக்கில் தொழில்நுட்பரீதியான வாதங்களை காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியன் தெரிவிப்பார் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செவ்வாய் கிழமை நடைபெற்ற விசாரணையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு இறுதியானது என கூறி வந்த நிலையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி நாடாளுமன்ற விவாதத்திற்கு உட்பட்டது என கூறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவு என்பது நாடாளுமன்றத்தில் விவாதித்து செயல்படுத்தப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட மத்திய அரசு, நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அனைத்து தரப்பிற்கும் சாதகமாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பேதங்கள் கிடையாது எனவும் குறிப்பிட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கான மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டில் அரசாணை வெளியிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கால தாமதம் செய்வது தவறான அணுகுமுறை என்றும் கண்டனம் தெரிவித்தனர்.