அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் செல்வது வழக்கம். பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த மாதம் தொடங்கியது.
இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று தரிசித்து வருகின்றனர். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு முகாம்களில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு அமர்நாத் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரை சென்று விட்டு குஜராத் மாநில யாத்ரீகர்கள், ஜம்முவுக்கு பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பேருந்து அனந்தநாகின் கானாபால் எனுமிடதுக்கு வந்த போது, அதன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் ஆறு பேர் உள்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர்.
முன்னதாக, காவல்துறையினர் வந்த வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினர் அதற்கு தக்க பதிலடி கொடுக்க, தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதற்கு பின்னரே, யாத்ரீகர்கள் வந்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தாக்குதல் செய்தி அறிந்து தான் மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட தீவிரவாத தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.