மஹராஷ்டிராவை சேர்ந்த தம்பதிகள் பிரகாஷ் ஆம்தே மற்றும் மந்தாகினி ஆம்தே. இருவரும் மருத்துவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை யாருமே வாழமுடியாத முறையில் வாழ்கின்றனர். தன் வீட்டில் 90-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை தம்பதிகள் இருவரும் பேணி வளர்க்கின்றனர்.
1970-களில் தம்பதிகள் இருவரும் காட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தண்டரயனா காடுகளுக்குள் பயணம் மேற்கொண்டனர். அப்போது, அங்கு வாழ்ந்துவரும் மடியா கோண்ட் பழங்குடியின மக்கள், வேட்டையாடிவிட்டு வருகின்றனர். அவர்கள் ஒரு குரங்கினை வேட்டையாடியுள்ளனர். வேட்டையாடிய குரங்கின் குழந்தை அதன் மாரபகங்களில் பாலை தேடுகிறது. இந்த காட்சி மருத்துவ தம்பதிகளின் மனதை வெகுவாக பாதித்தது. ஆனால், காட்டில் உள்ள விலங்குகள், தாவரங்களை தங்கள் வாழ்வாதாரத்திற்காக தேவையான அளவு வேட்டையாடுவது பழங்குடியினத்தவர்களின் உரிமை என்பதை அவர்கள் மறுக்கவில்லை.
அந்தக் குட்டிக்குரங்கை அவர்களிடமிருந்து கேட்டு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்று வளர்த்தனர். அவர்களின் வீட்டுக்குள் நுழைந்த முதல் வனவிலங்கு அந்த குரங்குக் குட்டிதான். அதன்பிறகு, பழங்குடியினரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர் அந்த தம்பதிகள். இளம் விலங்குகள், காயமடைந்த வனவிலங்குகளை மட்டும் வேட்டையாட வேண்டாம் என. அவர்களும் ஒத்துக்கொண்டனர்.
இப்படியாக, நரிகள், சிறுத்தை, கரடி, காட்டு அணில், மயில், மான்கள் என 300-க்கும் மேற்பட்ட விலங்குகளை அவர்கள் பராமரித்து வளர்த்து வந்தனர். அவர்கள் வீடு குட்டி சரணாலயமாக மாறியது. அவர்களுடைய 3 குழந்தைகளும் அந்த விலங்குகளுடனேயே வளர்ந்தனர். இப்போது அவர்களுடைய பேரன், பேத்திகளும்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/main-qimg-c6dc56769cc468cc9f4277f300226bdb-300x240.png)
அதுமட்டுமல்ல. காட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காகவும் அத்தம்பதிகள் உழைத்தனர். அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று மருத்துவம் பார்த்தனர். அங்குள்ள குழந்தைகளுக்கு மரத்தடியில் கல்வி கற்பித்தனர். படிப்படியாக அவர்களது வாழ்வும் உயர்ந்தது. இப்போது அந்த பழங்குடியினத்தவர்களில் மருத்துவர், பொறியாளர்கள் இருக்கின்றனர். மேலும், பழங்குடிகள் வேட்டையாடுவதை விட்டுவிட்டு விவசாயத்தை பிரதான தொழிலாக மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
அதனால், மருத்துவ தம்பதிகளின் வீட்டில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து தற்போது சுமார் 90 விலங்குகள் உள்ளன.
இவர்களின் இந்த சேவைக்காக தம்பதிகள் இருவருக்கும் கடந்த 2008-ஆம் ஆண்டு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.