இஸ்லாமிய மதத்தில் பின்பற்றப்படும் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இஸ்லாமிய மதத்தில் ஷரியத் சட்டத்தை பின்பற்றி தனது மனைவியை ஒருவர் "முத்தலாக்" கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதனால், பாதிப்படைந்த பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த 7 மனுக்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மனுக்களை கடந்த மார்ச் 30-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மனுக்களை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவித்தது.
அதையடுத்து, தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான நீதிபதிகள் ரோஹின்டன் நரிமன், உதய் லலித், ஜோசப் குரியன், அப்துல் நசீர் ஆகிய ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மே மாதம் 18-ம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, முத்தலாக் விவகாரத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது. அதில், நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். மூன்று நீதிபதிகள் ஒரு கருத்தையும், இரு நீதிபதிகள் வேறொரு கருத்தையும் தெரிவித்துள்ளனர்.
காலை 10.40: நீதிபதிகள் ரோஹின்டன் நரிமன், உதய் லலித், ஜோசப் குரியன் ஆகியோர் முத்தலாக் விவகாரம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் முத்தலாக்கிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.
முத்தலாக் என்பது இஸ்லாமியர்களின் தனிச் சட்டத்தின் ஒரு பகுதி, அது அவர்களது அடிப்படை உரிமை என தெரிவித்த தலைமை நீதிபதி கெஹர், இதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் ஆறு மாதத்துக்குள் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
காலை 11.20: ஷரியத் சட்டத்தை மீறும் வகையில், புனித குரானின் கொள்கைகளுக்கு முத்தலாக் எதிரானது. இஸ்லாமிய நடைமுறையுடன் முத்தலாக் ஒருங்கிணைந்த ஒன்று என்ற தலைமை நீதிபதியின் கருத்தை ஒப்புக் கொள்வது மிகவும் கடினம் என நீதிபதிகளுள் ஒருவரான குரியன் தெரிவித்துள்ளார்.