மத்திய அமைச்சர் கௌஷால் கிஷோர், சனிக்கிழமையன்று லம்புவா சட்டமன்றத் தொகுதியில் போதைக்கு அடிமையாதல் குறித்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது, “குடிகாரனின் ஆயுட்காலம் மிகவும் குறைவு,” என்றார்.
தொடர்ந்து தனது தனிப்பட்ட அனுபவத்தை விவரித்த அவர், “எம்.பி.யாக இருந்த நானும், எம்.எல்.ஏ.வாக இருந்த எனது மனைவியும் எங்கள் மகனின் உயிரைக் காப்பாற்ற முடியாதபோது, பொது மக்கள் எப்படி காப்பாற்றுவார்கள்” என்றார்.
“என் மகன் (ஆகாஷ் கிஷோர்) தன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கத்தில் இருந்தான். போதை ஒழிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த கெட்டப் பழக்கத்தை விட்டுவிடுவார் என்று கருதி, ஆறு மாதங்களுக்குப் பிறகு திருமணம் செய்துவைத்தோம். இருப்பினும், அவர் தனது திருமணத்திற்குப் பிறகு மீண்டும் குடிக்கத் தொடங்கினார்.
அது, இறுதியில் அவரது மரணத்திற்கு வழிவகுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 19 அன்று, ஆகாஷ் இறந்தபோது, அவரது மகனுக்கு இரண்டு வயதுதான்" என்று மத்திய அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து, கௌஷல் கிஷோர் கூட்டத்தில், “என்னால் என் மகனைக் காப்பாற்ற முடியவில்லை, அதனால் அவன் மனைவி விதவையானாள். இதிலிருந்து உங்கள் மகள்களையும் சகோதரிகளையும் காப்பாற்ற வேண்டும்.
சுதந்திர இயக்கத்தில், 90 ஆண்டுகளில் 6.32 லட்சம் பேர் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர்,
அதே நேரத்தில் போதைப் பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் இறக்கின்றனர்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் எம்.பி. மேலும் கூறுகையில், புற்றுநோய் இறப்புகளில் 80 சதவிகிதம் புகையிலை, சிகரெட் மற்றும் ‘பீடி’க்கு அடிமையாவதால் ஏற்படுகிறது” என்றார்.
இதையடுத்து, மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்ற போதை ஒழிப்பு பிரச்சாரத்தை அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், காலை தொழுகையின் போது குழந்தைகளுக்கு இது தொடர்பான அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/