நொய்டாவை தளமாகக் கொண்ட மரியன் பயோடெக் தயாரித்த Doc-1 Max என்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிரப்பை உட்கொண்டதால், சமர்கண்டில் 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
உஸ்பெகிஸ்தான் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மருந்தை ஆய்வக சோதனைக்கு உட்படுத்தியதில் அதில், மாசுபடுத்தும் எத்திலீன் கிளைகோல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் மருந்து பரிந்துரைக்கப்படாமல, பாதிக்கப்பட்ட குழந்தைகளால் அதிக டோஸில் உட்கொள்ளப்பட்டதாக அது கூறியது.
அறிக்கையின்படி, ஆரம்ப ஆய்வக முடிவுகள் சிரப்பின் ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் எத்திலீன் கிளைகோல் இருப்பதை உறுதி செய்தது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது, மேலும் 95% செறிவூட்டப்பட்ட மருந்தில் 1-2ml/kg உட்கொள்வது வாந்தி, மயக்கம், வலிப்பு, இருதய பிரச்சனைகள் மற்றும் கடுமையான சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில்: உஸ்பெகிஸ்தானில் உள்ள சுகாதார அதிகாரிகளுடன் உலக சுகாதார அமைப்பு தொடர்பில் உள்ளது, மேலும் விசாரணைகளுக்கு உதவ தயாராக உள்ளது என்றது.
மரியன் பயோடெக், தயாரிப்பு நிறுவனமும், மத்திய சுகாதார அமைச்சகமும் இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
டாக்-1 மேக்ஸ் சிரப்பில் பாராசிட்டமால் இருப்பதால், உள்ளூர் மருந்தகங்களின் பரிந்துரையின் பேரில் பெற்றோர்கள் அதை சளி எதிர்ப்பு மருந்தாக தவறாகப் பயன்படுத்தியதாக உஸ்பெகிஸ்தான் அமைச்சக அறிக்கை கூறியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, குழந்தைகள் 2 முதல் 7 நாட்களுக்கு, 2.5 முதல் 5 மில்லி அளவுகளில், ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை மருந்தை உட்கொண்டனர். இது குழந்தைகளுக்கான டோஸை விட அதிகம்.
38 முதல் 38.5 டிகிரி செல்சியஸ் உடல் வெப்பநிலையில், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு 100 முதல் 125 mg, 1- 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 200 mg, 3-5 வயதுள்ள குழந்தைகளுக்கு 250 mg கொடுக்க வேண்டும். சாதாரண உடல் வெப்பநிலையில் மருந்தை உட்கொள்ளக் கூடாது என்று அறிக்கை கூறியது.
டிசம்பர் 15 தேதியிட்ட சமர்கண்ட் பிராந்திய குழந்தைகள் பல்துறை மருத்துவ மையத்திலிருந்து, பிராந்திய சுகாதாரத் துறையின் தலைவர் Davronbek Zhumaniyozov க்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இரண்டு மாதங்களில் 21 குழந்தைகளில் சிறுநீரக செயலிழப்பு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகளால் சிறுநீரை உற்பத்தி செய்ய இயலவில்லை மற்றும் 17 கடுமையான நோயுடன் டயாலிசிஸ் செய்ய வேண்டியிருந்தது, அவர்களில் 15 பேர் இறந்தனர்.
இதைத் தொடர்ந்து, உஸ்பெகிஸ்தானில் டாக்-1 மேக்ஸின் மாத்திரைகள் மற்றும் சிரப்கள் விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்பட்டன. பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமைச்சகம் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டது. குழந்தைகள் இறப்பை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் ஏழு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
உஸ்பெகிஸ்தான் சம்பவம், மேற்கு ஆப்பிரிக்காவின் சிறிய நாடான காம்பியாவில், எத்திலீன் கிளைகோல் மற்றும் டை-எத்திலீன் கிளைகோல் ஆகியவற்றால் மாசுபடுத்தப்பட்ட இந்தியா தயாரித்த சிரப்களை உட்கொண்டதால் 70 குழந்தைகள் இறந்த நிகழ்வை போன்றது.
காம்பியாவில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி மருந்துகளுக்கான எச்சரிக்கையை எழுப்பியது, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியது.
ப்ரோமெதாசின் ஓரல் சொல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மாகோஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் – ஆகிய நான்கு சிரப்புகளும் ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
இந்த நிறுவனம் நிறுவனம் காம்பியா நாட்டிற்கு ‘சிரப்’ இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்தது. இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உரிமம் பெறவில்லை.
கடந்த வாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின் படி, காம்பியன் தேசிய சட்டமன்றத்தின் ஒரு தேர்வுக் குழு, கடுமையான சிறுநீரக பாதிப்பால் 70 குழந்தைகள் இறந்ததற்கு, இந்திய மருந்து நிறுவனமான மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த நான்கு அசுத்தமான சிரப்களை உட்கொண்டது தான் காரணம் என்று முடிவுக்கு வந்தது.
இந்த குழு அதன் அறிக்கையில், மெய்டன் தயாரிப்பு மருந்துகளை தடுப்புப்பட்டியலில் சேர்க்கவும், அதன் தயாரிப்புகளை காம்பியன் சந்தையில் தடை செய்யவும் மற்றும் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது.
இந்த ஆண்டு ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், காம்பியாவில் 82 குழந்தைகள் கடுமையான சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டனர். இதில் 70 பேர் உயிரிழந்தனர்.
ஆனால் மெய்டன் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது. இருப்பினும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, தயாரிப்பில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, சோனேபட்டில் உள்ள அதன் உற்பத்திப் பிரிவை மூடியது.
ஆனால் காம்பியன் நாடும், மெய்டனின் நான்கு சிரப்களுடன் இறப்புகளை இணைத்து அக்டோபரில் எச்சரிக்கையை எழுப்பிய உலக சுகாதார அமைப்பும், இறப்பு மற்றும் மருந்து நுகர்வு ஆகியவற்றுக்கு இடையேயான காரணத்தை நிறுவ போதுமான மருத்துவ விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்று இந்தியா கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.