பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தசரி நாராயணராவ் காலமானார். அவருக்கு வயது 75.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் ஹைதராபாத்தில் உள்ள கேஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சுவாசப் பிரச்சனை காரணமாக இன்று காலமானனார்.கடந்த மே 4-ம் தேதி தசரி நாராயணராவ் தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். தெலுங்கு திரைப்படவுலகில் பிரபலமான தசரி நாரயண ராவ், இந்தியாவில் அதிக திரைப்படங்களை இயக்கியதற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவர்.
1986-ல் வெளிவந்த தந்திரா பாப்பராயடு, 2000-ல் வெளிவந்த காந்தே குதுர்னே கனு உள்ளிட்டவை அவர் இயக்கிய திரைப்படங்களில் பிரபலமானவை.
தெலுங்கில் அதிக படங்களை இயக்கியுள்ள அவர் பாலிவுட்டிலும் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதுவரை 151 திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், 51 படங்களை தயாரித்துள்ளார். ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க போவதாக தசரி நாராயணராவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தசரி நாராயணராவ் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:இந்தியாவில் உள்ள தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான தசரி நாராயண ராவ் எனது நெருங்கிய நண்பர். அவரது மறைவு இந்திய திரைப்படவுலகிற்கு பெரும் இழப்பு. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.