ஆசிரியர்களால் குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் பல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ’குரு சேவை’ என்ற பெயரில் மாணவிகளை ஆசிரியரே தன் வாகனத்தை சுத்தம் செய்த சம்பவம் அண்மையில் ஒரிசாவில் அரங்கேறியது. அதேபோல், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரக்கமே இல்லாமல் ஆசிரியை ஒருவர் மாணவனை ஒரு நிமிடத்தில் சுமார் 50 முறை சரமாரியாக அடித்து துன்புறுத்திய சம்பவம் நடைபெற்றது.
இப்படி, அன்றாடம் ஆசிரியர்களால் மாணவர்கள் வன்முறை சம்பவங்களுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்போது, அவற்றுக்கெல்லாம் உச்சமாக அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி வகுப்பறையில் அமர்ந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பில்ஹவுர் நகருக்கு உட்பட்டு நிவாடா எனும் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தான் இச்சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் தள்ளாடியபடி அமர்ந்திருக்கிறார். அவரால், தன் தலையைக் கூட நிமிர்த்தி அமர முடியவில்லை.
பாடம் நடத்தவேண்டிய ஆசிரியர் இப்படி மதுபோதையில் இருப்பதால் என்ன செய்வதென்று அறியாத அந்த பிஞ்சுக் குழந்தைகள், ஆசிரியரை சூழ்ந்துக்கொண்டு அவரை கேலி செய்து சிரித்து விளையாடுகின்றனர்.
அப்போது, அந்த ஆசிரியரை அங்கிருந்த யாரோ ஒருவர் செல்ஃபோனில் வீடியோவாக எடுத்துவிட்டனர். அங்கு சூழந்துகொண்டிருந்த மாணவர்களுள் ஒருவன், தன் ஆசிரியரின் தலையை நிமிர்த்தி கேமரவுக்கு காட்ட முயற்சிக்கிறான். தன்னைத்தான் வீடியோ எடுக்கிறார்கள் என்பதை கூட தெரிந்துகொள்ளும் வகையில் நிதானத்தில் இல்லாத அந்த ஆசிரியர், “தலை கவிழ்ந்த நிலையிலேயே வீடியோ எடுங்கள்” என்கிறார்.
இந்த 34 நொடி வீடியோவை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.
இந்த ஆசிரியரை கண்டறிந்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.