மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மே 14-ம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில், அங்குள்ள 7 மாநகராட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 4 மாநகராட்சிகளில் அமோக வெற்றி பெற்றது. தோம்கல், மிரிக், புஜலி மற்றும் ராய்கன்ஜ் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான வார்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிவாகை சூடியது. இதேபோல டார்ஜிலிங், குர்சியாங் மற்றும் கலிம்போங் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக கூட்டணி அநேக இடங்களில் வெற்றி பெற்றது.
மலைப் பகுதியான மிரக் நகராட்சியில் இதற்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதே இல்லை. தற்போது திரிணாமுல் காங்கிரஸ் அங்கு வெற்றிபெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், திரிணாமுல் கங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மிரக் மக்களுக்கு மிக்க நன்றி. தற்போது மலைப்பிரதேசங்களிலும் எங்களது சகாப்தம் தொடங்கியுள்ளது. மலைகள் அனைத்தும் மகிழ்ச்சியில் சிரிக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அம்மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் 211 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.