இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் ஹரித்வாரில் உள்ள தங்கள் பகுதியில், இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார்கள் என்றும் டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியா அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்த பிறகு சாதிவெறி கருத்துகளை தெரிவித்தனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முக்கிய குற்றவாளியான விஜய்பால் (25) வியாழக்கிழமை காலை ரோஷ்னாபாத் ஸ்டேடியத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
வந்தனாவின் சகோதரர் சந்திரசேகர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “எங்கள் வீட்டிற்கு வெளியே 3-4 இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து டான்ஸ் ஆடியதை பார்த்தோம். தேசிய அணியில் என்னுடைய சாதியைச் சேர்ந்தவர்கள் எப்படி விளையாடலாம் என்று அவர்கள் சொன்னார்கள்?
மேலும் அவர் கூறுகையில், “எங்கள் குடும்பம் அச்சத்தில் உள்ளது. ஏனென்றால், அந்த இளைஞர்கள் எங்களை கொலை செய்வதாக மிரட்டினார்கள். நடந்த முழு சம்பவத்தையும் விவரித்து நாங்கள் புகார் அளித்துள்ளோம்.” என்று கூறினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் தங்கள் வீட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில் அதே பகுதியில், ரோஷ்னாபாத் பகுதியில் வசிப்பதாகவும் அவர் கூறினார்.
சந்திரசேகர் மேலும் கூறுகையில், “அவர்களில் இருவர் ஹாக்கி வீரர்கள். அவர்கள் எங்களுடன் பகையுடன் இருப்பவர்கள். ஆனால், ஒலிம்பிக்கில் தேசிய அணியின் தோல்வி குறித்த அவர்களைன் செயலை ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்” என்றார்.
ஹரித்வார் காவல்துறையின் அறிக்கைப்படி, சிட்கல் காவல் நிலையத்தில், விஜய் பால், அங்கூர் பால் மற்றும் சுமித் சவுகான் ஆகிய 3 பேர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஐபிசி பிரிவு 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.