மும்பை தொடர் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட இருவருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தடா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 700 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை மும்பையில் உள்ள பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைக்கான சிறப்பு நீதிமன்றம் (தடா) விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், அவரது உறவினர் அபு சலீம், முஸ்தபா தோசா உள்ளிட்டோர் பலர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றனர். அவர்களில் அபு சலீம் கடந்த 2005ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டார். முஸ்தபா தோசா என்பவர் ஐக்கிய அரபு எமீரேட்சிலிருந்து இந்தியா அழைத்து வரப்பட்டார். அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
இதைத் தொடர்ந்து அப்துல் ரஷீத் கான், தாஹிர், அபு சலீம், கரிமுல்லா கான், முஸ்தபா ஆகியோருக்கான தண்டனை விவரங்கள் இன்று தடா நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் பெரோஸ் அப்துல் ரஷீத் கான் மற்றும் தாஹிர் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், அபு சலீம் மற்றும் கரிமுல்லா கான் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையும், ரியாஸ் சித்திக்கிற்கு 10 ஆண்டுகள் சிறையும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் அபுசலீமுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படவில்லை. போர்ச்சுகல் நாட்டில் பதுங்கியிருந்த அபூ சலீமை 2005-ம் ஆண்டு, அந்நாட்டு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. போர்ச்சுகலில் மரணதண்டனைக்குத் தடை இருக்கிறது. போர்ச்சுகல் அரசிடம் அபுசலீமுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என வாக்குறுதி அளித்துதான் சி.பி.ஐ அதிகாரிகள் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். மரண தண்டனை அமலில் உள்ள நாட்டில் பிடிபட்டிருந்தால், அவருக்கும் தூக்குத்தண்டனைதான் விதிக்கப்பட்டிருக்கும்.
முன்னதாக, 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் மதியம் 1.30 மணியிலிருந்து 3.40 மணி வரை மும்பை நகரத்தின் 12 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது. மும்பை பங்குச் சந்தை கட்டிடத்தில் முதல் குண்டு வெடித்தது குறிப்பிடத்தக்கது.