/tamil-ie/media/media_files/uploads/2017/09/suicide-video.jpg)
தன் மனைவி பிரிந்து சென்றதால், பிரபல பாம்புகள் வல்லுநர் அர்ஸ்லான் வாலீவ், தன்னுடைய ப்ளாக் மம்பா பாம்பை தன்னை கடிக்க செய்து தற்கொலை செய்துகொண்டதை சமூக வலைதளத்தில் நேரலை செய்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அர்ஸ்லான் வாலீவின் இறப்பு அவரது ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல பாம்புகள் வல்லுநரான ரஷ்யாவை சேர்ந்த அர்ஸ்லான் வாலீவ், தன் மனைவி எகடீரினா காட்யாவுடன் சேர்ந்து பாம்புகள் மற்றும் பூனைகள் குறித்து யுடியூபில் பதிவிட்டு புகழ் பெற்றவர்கள். இவர்களது வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சமீபத்தில் தன் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அர்ஸ்லான் வாலீவ் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதன்காரணமாக, மனைவிக்கு மூளையதிர்ச்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அர்ஸ்லான் வாலீவின் மனைவி எகடீரினா அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில், தன் மனைவியை சமாதானப்படுத்தி தன்னுடன் சேர்ந்து வாழ அர்ஸ்லான் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. மேலும், தான் செய்த தவற்றுக்காக சில நாட்களுக்கு முன்பு தன் மனைவியிடம் பொது இடத்தில் மன்னிப்பு கேட்டார் அர்ஸ்லான் வாலீவ். ஆனால், அவரை மன்னிக்காத எகடீரினா, விவாகரத்துக்கு விண்ணப்பித்து வேறொருவருடன் இணைந்து வாழ முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதை தாங்கிக் கொள்ள முடியாத அர்ஸ்லான், கடும் மன வேதனைக்கு ஆளாகினார். இந்நிலையில், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த அர்ஸ்லான், தன் தற்கொலையை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்தார். அதில், தன்னுடைய செல்ல பிராணியான கடும் விஷம் கொண்ட ப்ளாக் மம்பா பாம்பை தன்னை கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் நேரலையில் பேசிய அர்ஸ்லான், “இந்த வீடியோவை பார்த்து யாராவது என்னுடைய மனைவியிடம் தெரிவிப்பார்கள் என்பதாலேயே இச்செயலை செய்கிறேன்” எனவும், மனைவி பிரிந்து சென்றதை தன்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை எனவும் கூறினார்.
அவருடைய தற்கொலை குறித்து முன்னாள் மனைவி எகடீரினா எவ்வித கருத்தும் தற்போது வரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.