/tamil-ie/media/media_files/uploads/2017/08/Z127.jpg)
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் ஈவா எக்கேவர்ரியா எனும் 63 வயதான பெண், ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கர்ப்பப்பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோயால் கடந்த சில ஆண்டுகளாக மரணபடுக்கையில் படுத்துள்ள ஈவா, தன்னுடைய சிறு வயது முதலே ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை பயனபடுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதை அந்நிறுவம் முன்னெச்சரிக்கையாக அறிவிப்பதை தவிர்த்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ செலவு மற்றும் அபராதத்தொகையாக 2600 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தினுடைய பேபி பவுடர் மற்றும் இதர தயாரிப்புகளும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கிறது என்று நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த ஆண்டும் கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ரூ.467 கோடி இழப்பீடு வழங்க செயின்ட் லூயிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முந்தைய வழக்குகளில் மேல் முறையீடு செய்தது போலவே இந்த வழக்கிலும் மேல் முறையீடு செய்ய ஜான்சன் & ஜான்சன் திட்டமிட்டுள்ளது.
"அறிவியலை எங்கள் நிறுவனம் பின்பற்றுவதால், தற்போதைய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளோம்" என ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் செய்தி தொடர்பாளர் கரோல் குட்ரிச் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.